சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றி புரிந்து கொள்வோம்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றி புரிந்து கொள்வோம்.

நமது உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரல் செரிமான பாதையிலிருந்து வரும் ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் முன்னர் இரத்தத்தை வடிகட்டும் வேலையை செய்கிறது. இது இரசாயன பொருட்களின் நச்சுதன்மையை நீக்கி மருந்துகளை வளர்சிதைமாற்றத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் தசைகள் கட்டமைத்தல், தொற்று நோய்களை எதிர்த்து போராடும் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்யும் பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன. 

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? அது எப்போது தேவைப்படுகிறது

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நோயுற்ற கல்லீரலை அகற்றி, அதற்கு பதிலாக ஆரோக்கியமான ஒன்றை மாற்றுவதற்கான ஒரு அறுவை சிகிச்சையே ஆகும். கல்லீரல் போதுமான அளவு செயல்படாதபோது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்று கருதப்படுகிறது (கல்லீரல் செயலிழப்பு). பெரியவர்களில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மிகவும் பொதுவான காரணம் சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயாகும் மற்றும் குழந்தைகளில், இது பிலியரி அட்ரேசியா ஆகும். மற்ற சூழ்நிலைகளானது வைரஸ் ஹெபடைடிஸ், கல்லீரல் புற்றுநோய் மற்றும் பரம்பரை நோய்கள்.

மாற்று அறுவை சிகிச்சை குழு

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பொருத்தமானதா என்பதை தீர்மானிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தேவை. இந்த குழுவில் பின்வரும் நிபுணர்கள் அடங்குவர்:

  • கல்லீரல் நிபுணர் (ஹெபடாலஜிஸ்ட்)
  • மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்
  • மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்
  • ஊட்டச்சத்து ஆலோசகர்
  • பிஸியோதெரபிஸ்ட்
  • உளவியல் ஆலோசகர்
  • மயக்க மருந்து நிபுணர்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனையை தெரிவு செய்ய உதவும் சரிபார்ப்பு பட்டியல்

  • இந்த அறுவை சிகிச்சைக்கு மிக கவனமான கிருமிகள் உட்புகா நடவடிக்கைகள் தேவை, எனவே லேமினார் புளோவுடன் கூடிய தனித்த அறுவை சிகிச்சை அரங்கங்கள் உள்ள மருத்துவமனைகள்.
  • கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அதிநவீன தொழில்நுட்பங்களான 320 ஸ்லைஸ் சி.இ.சி.டி ஆஞ்சியோகிராபி மற்றும் வால்யூமெட்ரி, ஆர்கான் ஒளிகற்றை இவற்றோடு க்யூசா மற்றும் வாட்டர் ஜெட் டி.எம் போன்ற கல்லீரல் பிரிவின் கருவிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள்.
  • 24 மணி நேரமும் செயல்படும் இரத்த வங்கி
  • கல்லீரல் மாற்று நோயாளிகளின் பரிசோதனைக்கு தேவையான சிறப்பு நோயியல் மற்றும் நோயெதிர்ப்பு வசதிகள் – கல்லீரல் கொடையாளர்கள் மற்றும் பெறுநர்கள் இருவருக்கும் சேர்த்து.
  • அர்ப்பணிக்கப்பட்ட ஹெபடோபிலியரி (கல்லீரல் சிறப்பு) அவசர பராமரிப்பு பிரிவு, எப்போதும் தயாராக இருக்கும் ஒரு கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர், மயக்க மருந்து ஊழியர்கள் மற்றும் ஒரு சிறப்பு செவிலியர் குழு

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

வாழும் கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையானது ஆரோக்கியமான வாழும் கொடையாளரிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை அகற்றி, அதைப் பெறுபவருக்குள் பொருத்துவதாகும். இது கல்லீரலின் அசாதாரனமான செயல்திறனின் இருப்பு (ரிசர்வ்) (70%) மற்றும் மீள் உருவாக்கம் அடைவதன் அற்புதமான திறன் காரணமாக இது சாத்தியமாகிறது. கொடையாளர் மற்றும் பெறுநரின் கல்லீரல் பிரிவுகள் அறுவை சிகிச்சை முடித்த சில வாரங்களில் சாதாரண அளவுக்கு வளரும்.

முழுவதும் செயலற்ற (மூளை இறந்த நிலை) கொடையாளர் கல்லீரல் மாற்று சிகிச்சையில், கொடையாளர் ஒரு நோயாளி ஆவார், அந்த சூழ்நிலையில் அவரின் மூளை நிரந்தரமாக மற்றும் மீளமுடியாமல் வேலை செய்வதை நிறுத்தியிருக்கும். அவரின் கல்லீரல் மற்ற உறுப்புகளோடு உறவினர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்படுகிறது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு பொதுவாக 6 முதல் 10 மணி நேரம் ஆகும். நோயுற்ற கல்லீரல் அகற்றப்பட்டு கொடை கல்லீரலுடன் மாற்றப்படுகிறது. புதிய கல்லீரலைப் பொருத்துவதற்கு முன்பு அறுவை சிகிச்சை நிபுணர் பித்த நாளங்கள் மற்றும் இரத்த நாளங்களிலிருந்து நோயுற்ற கல்லீரலைத் துண்டிக்கிறார்.கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிந்திய பராமரிப்பின் போது மருத்துவமனையிலும், வீட்டிலும் கல்லீரலின் சாதாரண செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் நிராகரிப்பைத் தடுக்கவும் மருந்துகளைப் பயன்படுத்துவது அடங்கும். வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நோயாளிகள் இயல்பாக தங்கள்

வேலை, சமூக மற்றும் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.

ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை எப்போது தேவைப்படுகிறது?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு கடுமையான கல்லீரல் நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. பெரியவர்களில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மிகவும் பொதுவான காரணம் சிரோசிஸ் ஆகும். சிரோசிஸ் என்பது நீண்டகால பாதிப்பு காரணமாக கல்லீரல் மெதுவாக மோசமடைந்து செயலிழக்கும் ஒரு நிலை. அழுகிப்போன திசுவானது ஆரோக்கியமான கல்லீரல் திசுக்களை மாற்றுகிறது, இது கல்லீரல் வழியாக செல்லும் இரத்த ஓட்டத்தை பாதியாக தடுக்கிறது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்கள், ஆல்கஹால்/மதுபானம் எடுப்பது, ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள், கல்லீரலில் கொழுப்பு சேர்வது மற்றும் பரம்பரை கல்லீரல் நோய்கள் போன்றவை காரணமாக சிரோசிஸ் ஏற்படலாம். மதுபானம் அதிகமாக பயன்படுத்துவதால் பலருக்கும் சிரோஸில் நோய் கல்லீரலில் உருவாகிறது. இவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த நோயாளிகளுக்கு மதுபானம் தவிர்ப்பது மற்றும் 6 மாதங்களுக்கு தொடர் சிகிச்சையளிப்பது பொதுவாக அவர்களில் சிலரின் உடல் நலத்தை கணிசமாக மேம்படுத்த அனுமதிக்கும், மேலும் இந்த நோயாளிகள் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் நீண்ட காலத்திற்கு உயிர்வாழக்கூடும். தீவிர கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நீண்டகால மதுவிலக்கு மற்றும் மருத்துவ சிகிச்சை மூலம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கத் தவறினால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாதது ஆகும்.

குழந்தைகளில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மிகவும் பொதுவான காரணம் பிலியரி அட்ரேசியா ஆகும். பிலியரி அட்ரேசியா என்பது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஒரு அரிதாக காணப்படுவது, இதில் கல்லீரல் மற்றும் சிறுகுடலுக்கு இடையிலான பொதுவான பித்த நாளம் அடைக்கப்பட்டிருப்பது அல்லது இல்லாமல் இருப்பது. கல்லீரலில் இருந்து பித்தத்தை வெளியேற்றும் குழாய்களான பித்த நாளங்கள் இல்லாமல் இருப்பது அல்லது சேதமடைந்து காணப்படுவது, மேலும் பித்தம் தடைபடுவது சிரோசிஸை நோயை ஏற்படுத்துகிறது. பித்தம் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இந்த நிலையை உடனடியாக அடையாளம் காணாவிட்டால், அது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. இந்த நிலைக்கு சரியான காரணம் தெரியவில்லை. இதற்கு இப்போதுள்ள பயனுள்ள சிகிச்சை முறைகள் சில அறுவை சிகிச்சைகள் அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே.

கல்லீரல் மாற்று சிகிச்சை தேவையின் பிற காரணங்கள் கல்லீரல் புற்றுநோய், தீங்கற்ற கல்லீரல் கட்டிகள் மற்றும் பரம்பரை நோய்கள்.

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான நபர்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறார்கள்?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தகுதியானதா என்பதை தீர்மானிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் மதிப்பீடுகள் தேவை. மதிப்பீட்டில் உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் பலவிதமான பரிசோதனைகளுக்கு நீங்கள் உட்படுத்தப்படுவீர்கள். உங்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை தேவையா, மாற்று அறுவை சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க உதவும் இரத்த பரிசோதனைகள், எக்ஸ்-ரே மற்றும் பிற சோதனைகளை மாற்று சிகிச்சை குழு ஏற்பாடு செய்யும். உங்கள் இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் மன ஆரோக்கியம் போன்ற உங்கள் ஆரோக்கியத்தின் பிற அம்சங்களும் நீங்கள் அறுவை சிகிச்சைக்கு போதுமான வலிமையுடன் இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

கல்லீரல் பிரச்சினைகள் உள்ள எவருக்கும் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா?

உங்களிடம் பின்வரும் நோய்கள் இருந்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது:

  • உங்கள் உடலின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் புற்றுநோய் இருப்பது
  • தீவிரமான இதயம், நுரையீரல் அல்லது நரம்பு நோய் இருப்பது
  • தீவிர மதுபான பிரியர் அல்லது சட்டவிரோத போதைப்பொருள் எடுத்துக்கொள்வது
  • தீவிரமான மற்றும் கடுமையான தொற்று
  • உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற இயலாமை

கல்லீரல் மாற்று முடிவு எவ்வாறு எடுக்கப்படுகிறது?

நோயாளியின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளியின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்படுகிறது. நோயாளி மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தின் உள்ளீடு மிக முக்கியமானது என்பதால் மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நன்மைகளை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்வது அவசியம்.

புதிய கல்லீரல் பெற எவ்வளவு நேரம் ஆகும்?

நீங்கள் செயலில் கல்லீரல் மாற்று தேவைப்படும் நபராக மாறினால், உங்கள் பெயர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும். நோயாளிகள் இரத்த வகை, உடல் அளவு மற்றும் மருத்துவ நிலை (அவர்கள் எவ்வளவு நோய்வாய்பட்டு இருக்கிறார்கள்) ஆகியவற்றின் படி பட்டியலிடப்படுகிறார்கள். ஒவ்வொரு நோயாளிக்கும் மூன்று எளிய இரத்த பரிசோதனைகள் (கிரியேட்டினின், பிலிரூபின் மற்றும் ஐ.என்.ஆர்) அடிப்படையில் முன்னுரிமை மதிப்பீடு(ஸ்கோர்) வழங்கப்படுகிறது. இந்த மதிப்பீடு பெரியவர்களுக்கு MELD (இறுதி நிலை கல்லீரல் நோயின் மாதிரி) மதிப்பீடு மற்றும் குழந்தைகளுக்கு PELD (குழந்தை இறுதி நிலை கல்லீரல் நோய்) என்று அழைக்கப்படுகிறது.

அதிக மதிப்பீடு பெற்ற நோயாளிகளுக்கு முதலில் மாற்று அறுவை செய்யப்படுகிறது. அவர்கள் மேலும் நோய்வாய்ப்பட்டால், அவர்களின் மதிப்பீடு (ஸ்கோர்) அதிகரிக்கும், இதனால் மாற்றுசிகிச்சை செய்வதற்கான அவர்களின் முன்னுரிமை அதிகரிக்கிறது, இதனால் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு முதலில் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இந்த மதிப்பீடு அனுமதியளிக்கிறது. கல்லீரல் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று கணிக்க முடியாது. நீங்கள் காத்திருப்பு பட்டியலில் எங்கு வைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை விவாதிக்க உங்கள் மாற்றுசிகிச்சை ஒருங்கிணைப்பாளர் எப்போதும் இருப்பார். நீங்கள் ஒரு புதிய கல்லீரலுக்காகக் காத்திருக்கும்போது, ​​வரவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு வலுவாக இருக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களும் உங்கள் மருத்துவரும் விவாதித்தால் நல்லது. புதிய கல்லீரலை கவனித்துக்கொள்வது பற்றியும் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம்.

மாற்று சிகிச்சைக்கான கல்லீரல் எங்கிருந்து வருகிறது?

கல்லீரல் மாற்று விருப்பங்களில் இரண்டு வகைகள் உள்ளன: உயிருள்ள கொடை மாற்று மற்றும் மூளைச்சாவு அடைந்த கொடை மாற்று அறுவை சிகிச்சை.

இறுதி நிலை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு உயிருள்ள கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒரு சரியான தேர்வாக இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்கும் கொடையாளரிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை அகற்றி, அதை ஒரு பெறுநரிடம் பொருத்துவது இதில் அடங்கும். கொடையாளர் மற்றும் பெறுநரின் கல்லீரல் பிரிவுகள் சில வாரங்களில் சாதாரண அளவுக்கு வளரும்.

இரத்த உறவினர், மனைவி அல்லது நண்பராக இருக்கும் கொடையாளருக்கு, மிகக் குறைந்த அளவில் உடல் நல பாதிப்பு ஏற்படுவதை உறுதிப்படுத்த விரிவான மருத்துவ மற்றும் உளவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது அவசியம். பொருத்தமான கொடையாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் இரத்த வகை மற்றும் உடல் அளவு முக்கியமான காரணிகளாகும். மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னர் அனைத்து உயிருள்ள கொடையாளர்கள் மற்றும் கொடை கல்லீரல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த பரிசோதனையானது கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யவும், உங்கள் இரத்த வகைக்கு பொருந்தவும், இதன் சரியான அளவு உங்கள் உடலில் வேலை செய்வதற்கான சிறந்த வாய்ப்பு இருப்பதை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

உயிருள்ள கொடையாளரிடம் இருந்து கல்லீரல் மாற்றுக்கான பெறுநர்கள் மாற்று காத்திருப்பு பட்டியலில் செயலில் இருக்க வேண்டும். வெற்றிக்கான சிறந்த வாய்ப்புகள் இருப்பதால் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தும் அளவுக்கு அவர்களின் ஆரோக்கியம் நிலையானதாக இருக்க வேண்டும்.

மூளைச்சாவு அடைந்த கொடையாளர் கல்லீரல் மாற்று சிகிச்சையில், கொடையாளர் விபத்து, மூளை ரத்தக்கசிவு அல்லது தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம். கொடையாளரின் இதயம் இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் மூளை செயல்படுவதை நிறுத்திவிட்டது. அத்தகைய நபர் சட்டபூர்வமாக இறந்தவராக கருதப்படுகிறார், ஏனென்றால் அவரது மூளை நிரந்தரமாக மற்றும் மீளமுடியாமல் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. இந்த கட்டத்தில், கொடையாளர் வழக்கமாக ஒரு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அத்தகைய நபர்களிடமிருந்து அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்துடன் கல்லீரல் தானம் செய்யப்படுகிறது. முழு கல்லீரல் இப்போது சற்று முன் இறந்தவர்களிடமிருந்து வருகிறது. இந்த வகை கொடையாளர் ஒரு சடல கொடையாளர் என்று அழைக்கப்படுகிறார். இறந்த கொடையாளரின் அடையாளம் மற்றும் அந்த நபரின் இறப்பை சுற்றியுள்ள சூழ்நிலைகள் இரகசியமாக வைக்கப்படும்.

கொடையாளருக்கும் பெறுநருக்கும் திசு வகை, பாலினம், வயது போன்றவற்றுடன் பொருந்த வேண்டுமா?

இல்லை. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, கொடையாளரும் பெறுநரும் ஏறக்குறைய ஒரே உடலமைப்பு மற்றும் இணக்கமான இரத்த வகைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே ஒரே தேவைகள். வேறு எந்த பொருத்தமும் தேவையில்லை.

கல்லீரல் தானம் பாதுகாப்பானதா?

கல்லீரல் தானம் மிகவும் பாதுகாப்பானது. ஏனென்றால், கல்லீரலில் பெரும் இருப்பு மற்றும் மீள் திறன் உள்ளது மற்றும் அதன் ஒரு பகுதி அகற்றப்பட்ட பின்னர் அதன் அசல் அளவுக்கு விரைவாக (2-3 மாதங்களுக்குள்) மீண்டும் உருவாகிறது. கொடையாளர் நீண்ட கால விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை, 2-3 வாரங்களுக்கு பிறகு எந்த மருந்தையும் எடுக்க வேண்டியதில்லை, ஒரு மாதத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார். அவனோ / அவளோ 3 மாதங்களில் கடுமையான உடல் சார்ந்த பணிகளை (பளு தூக்குதல் போன்றவை) மீண்டும் தொடங்கலாம்.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சில முக்கிய ஆபத்துகள் யாவை?

அறுவைசிகிச்சைக்கு முன்னர், கல்லீரல் நோய் தாக்கத்தின் சில கடுமையான உடனடி சிக்கல்கள்கலால் பிரதான ஆபத்து காத்திருக்கிறது, இது நோயாளியை அறுவை சிகிச்சை ஏற்றுக்கொள்ள முடியாததாக மாற்றக்கூடும். மாற்று அறுவை சிகிச்சையுடன் அனைத்து வகையான பெரிய அறுவை சிகிச்சைகளுக்கும் பொதுவான சில ஆபத்துகள் உள்ளன. கூடுதலாக, நோயுற்ற கல்லீரலை அகற்றுவதற்கும், கொடையாளர் கல்லீரலைப் பொருத்துவதற்கும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கலாம். நோயாளி எதிர்கொள்ளும் ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால், எந்தவொரு கல்லீரல் செயல்பாடும் இல்லாமல் இருக்கும் ஒரு குறுகிய காலத்தை சமாளிப்பது. அறுவைசிகிச்சை முடிந்த உடனேயே, இரத்தப்போக்கு, ஒட்டப்பட்ட கல்லீரலின் மோசமான செயல்பாடு மற்றும் நோய்த்தொற்றுகள் ஆகியவை பெரிய ஆபத்துகள். கல்லீரல் செயல்படாமல் நிராகரிக்கும் அறிகுறிகளுக்காக நோயாளி பல வாரங்கள் கவனமாக கண்காணிக்கப்படுகிறார்.

மருத்துவமனையில் என்ன நடக்கிறது?

உங்களுக்காக ஒரு கல்லீரல் அடையாளம் காணப்பட்டால், நீங்கள் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பீர்கள். நீங்கள் மருத்துவமனைக்கு வரும்போது, ​​கூடுதல் இரத்த பரிசோதனைகள், எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் மார்பு எக்ஸ்ரே ஆகியவை பொதுவாக அறுவை சிகிச்சைக்கு முன் எடுக்கப்படும். உங்கள் புதிய கல்லீரல் உயிருள்ள கொடையாளரிடமிருந்து வந்தால், நீங்களும் கொடையாளரும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சையில் இருப்பீர்கள். உங்கள் புதிய கல்லீரல் சமீபத்தில் இறந்த ஒருவரிடமிருந்து வந்தால், புதிய கல்லீரல் மருத்துவமனைக்கு வந்த உடன் உங்கள் அறுவை சிகிச்சை தொடங்குகிறது.

அறுவை சிகிச்சை எவ்வளவு நேரம் எடுக்கும்?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பொதுவாக 4 முதல் 14 மணி நேரம் ஆகும். அறுவை சிகிச்சையின் போது, ​​அறுவை சிகிச்சையாளர்கள் உங்கள் கல்லீரலை அகற்றி, அதை கொடையாளர் கல்லீரலுடன் மாற்றுவர். அறுவைசிகிச்சை நிபுணர் உங்கள் பித்த நாளங்கள் மற்றும் இரத்த நாளங்களிலிருந்து உங்கள் நோயுற்ற கல்லீரலை அகற்றுவதற்கு முன்பு துண்டிப்பார். உங்கள் கல்லீரலில் பாயும் இரத்தம் தடுக்கப்படும் அல்லது ஒரு இயந்திரத்தின் மூலம் இரத்தமானது உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்குத் செலுத்தப்படும். அறுவைசிகிச்சை  நிபுணர் ஆரோக்கியமான கல்லீரலை அதன் இடத்தில் வைத்து உங்கள் பித்த நாளங்கள் மற்றும் இரத்த நாளங்களுடன் மீண்டும் இணைப்பார். உங்கள் இரத்தம் உங்களின் புதிய கல்லீரலில் பாயும். மாற்று அறுவை சிகிச்சை ஒரு மிக முக்கிய செயல்முறையாக இருப்பதால், அறுவைசிகிச்சை மருத்துவர்கள் உங்கள் உடலில் பல குழாய்களை வைக்க வேண்டும். அறுவைசிகிச்சையின் போதும் அதற்கு பிறகும் சில நாட்களுக்கு உங்கள் உடல் சில செயல்பாடுகளைச் செய்ய இந்த குழாய்கள் அவசியம்.

இந்த மீட்பு காலத்தில் என்ன நடக்கும்?

ஆரம்பத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கல்லீரல் உட்பட அனைத்து உடல் செயல்பாடுகளையும் மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. நோயாளி வார்டுக்கு மாற்றப்பட்டதும், இரத்த பரிசோதனை போன்றவற்றின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, சாப்பிட அனுமதிக்கப்படுகிறது மற்றும் தசை வலிமையை மீண்டும் பெற பிசியோதெரபி பரிந்துரைக்கப்படுகிறது. நிராகரிப்பைத் தடுப்பதற்கான மருந்து அல்லது மருந்துகள் ஆரம்பத்தில் நரம்பில் ஏற்றப்படுகின்றன, ஆனால் பின்னர் வாயின் மூலமாக கொடுக்கப்படுகின்றன. மாற்று சிகிச்சையின் போது, ​​கல்லீரல் செயல்பாட்டைக் கண்காணிக்கவும், நிராகரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவும் அடிக்கடி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

நான் எப்போது வீட்டிற்கு செல்ல முடியும்?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சராசரியாக மருத்துவமனையில் தங்குவது இரண்டு வாரங்கள் முதல் மூன்று வாரங்கள் ஆகலாம். சில நோயாளிகள் குறைந்த நேரத்தில் வீட்டுக்கு அனுப்பபடலாம், மற்றவர்களுக்கு புதிய கல்லீரல் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் ஏற்படக்கூடிய சிக்கல்களைப் பொறுத்து மருத்துவமனையில் அதிக நாட்கள் இருக்கவேண்டியது வரலாம். இரண்டு சாத்திய கூறுகளுக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வழக்கமான நர்சிங் தளத்திற்கு மாற்றப்பட்டவுடன் உங்களுக்கு ஒரு டிஸ்சார்ஜ் கையேடு வழங்கப்படும், இது நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை மதிப்பாய்வு செய்கிறது. மருத்துவமனையில், நீங்கள் மெதுவாக மீண்டும் சாப்பிட ஆரம்பிப்பீர்கள். நீங்கள் முதலில் தெளிவான திரவ உணவுடன் தொடங்குவீர்கள், பின்னர் உங்கள் புதிய கல்லீரல் செயல்படத் தொடங்கும் போது திட உணவுக்கு மாறுவீர்கள்.

உங்களை எவ்வாறு கவனித்துக் கொள்வது மற்றும் உங்கள் புதிய கல்லீரலைப் பாதுகாக்க உங்கள் புதிய மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். இந்த செயல்பாடுகளை நீங்கள் தவறாமல் செய்யும்போது, ​​உங்கள் சொந்த உடல் நலத்தை பேணுவதில் நீங்கள் ஒரு முக்கிய பங்கேற்பாளராக மாறுவீர்கள். உங்கள் டிஸ்சார்ஜிற்கு முன், நீங்கள் கல்லீரல் நிராகரிப்பு மற்றும் நோய்த்தொற்றின் அறிகுறிகளையும் கற்றுக்கொள்வீர்கள், மேலும் உங்கள் மருத்துவரை அழைப்பது எப்போது முக்கியம் என்பதை அறிந்து கொள்வீர்கள். மாற்று அறுவைசிகிச்சைக்கு பின் பரிந்துரைக்கப்பட்ட பிந்தைய மாற்றுத் திட்டத்தில் இணைந்து செயல்படும் நோயாளியின் இசைவு ஒரு தேறிய உடல் நலத்தை கொண்டுவரும்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையுடன் சேர்ந்த  சிக்கல்கள் என்னென்ன உள்ளன?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வரும் மிகவும் பொதுவான இரண்டு சிக்கல்கள் நிராகரிப்பு மற்றும் தொற்று ஆகும்.

நிராகரிப்பு என்றால் என்ன?

கல்லீரல் ஒரு நபரிடமிருந்து (கொடையாளரிடமிருந்து) இன்னொருவருக்கு (பெறுநருக்கு) இடமாற்றம் செய்யப்படும்போது, ​​பெறுநரின் நோயெதிர்ப்புதிறன் அமைப்பு புதிய உறுப்புக்கு எதிராக எந்தவொரு வெளி பொருட்களுக்கும் எதிராக செயல்படும் அதே எதிர்செயலை தருகிறது, இது ஒரு சங்கிலிதொடர் எதிர்வினையை ஏற்படுத்தி புதிதாக இடமாற்றப்பட்ட உறுப்பை சேதப்படுத்தும். இந்த செயல்முறை நிராகரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இது விரைவாகவும் (கடுமையான நிராகரிப்பு) அல்லது நீண்ட கால இடைவெளியிலும் (நாள்பட்ட நிராகரிப்பு) ஏற்படலாம். கொடை செய்யப்பட்ட உறுப்பு மற்றும் மாற்று நோயாளிக்கு நெருக்கமாக பொருந்திய போதிலும் நிராகரிப்பு ஏற்படலாம்.

உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு, நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் உடலில் படையெடுக்கும் அன்னிய பொருட்களை அழிக்க வேலை செய்கிறது. இருப்பினும், நோயெதிர்ப்பு மண்டலத்தால் உங்கள் இடமாற்றப்பட்ட கல்லீரலை மற்றும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா போன்ற தேவையற்ற படையெடுப்பாளர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எனவே, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் புதிய கல்லீரலைத் தாக்கி அழிக்க முயற்சிக்கலாம். இது நிராகரிப்பு அத்தியாயம் என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல் மாற்று நோயாளிகளில் 70% பேர் டிஸ்சார்ஜிற்கு முன்னர் ஓரளவு உறுப்பு நிராகரிப்பைக் கொண்டுள்ளனர். நோயெதிர்ப்பு தாக்குதலைத் தடுக்க எதிர்ப்பு நிராகரிப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

நிராகரிப்பு எவ்வாறு தடுக்கப்படுகிறது?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எனப்படும் மருந்துகளைப் பெறுவீர்கள். உங்கள் புதிய கல்லீரலை நிராகரிக்கும் நோயெதிர்ப்பு சக்தியின் திறனை நோயெதிர்ப்பு மருந்துகள் பலவீனப்படுத்துகின்றன. இந்த மருந்துகள் உங்களின் நோயெதிர்பு சக்தியானது புதிய கல்லீரலை நிராகரிப்பதைத் தடுக்க உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வீரியத்தை குறைக்கும் அல்லது அடக்குகின்றன. நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் நிராகரிப்பின் அபாயங்களை வெகுவாகக் குறைத்து, புதிய உறுப்பைப் பாதுகாத்து அதன் செயல்பாட்டைப் பாதுகாக்கின்றன. இந்த மருந்துகள் பெறுநரின் நோயெதிர்ப்பு சக்தியைத் தடுப்பதன் மூலம் செயல்படுகின்றன, இதனால் இடமாற்றம் செய்யப்பட்ட உறுப்புக்கு எதிராக அது செயல்படுவதற்கான வாய்ப்பு குறைவு. இந்த நோக்கத்தை அடைய பல்வேறு வகையான மருந்துகள் கிடைக்கின்றன, ஆனால் நிராகரிக்கும் அபாயத்தைக் குறைக்க அவை வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. அவற்றில் ஸ்டெராய்டுகள், சைக்ளோஸ்போரின், டாக்ரோலிமஸ், சிரோலிமஸ் மற்றும் மைக்கோபெனோலேட் மொஃபெட்டில் ஆகியவை இருக்கலாம். உங்கள் வாழ்நாள் முழுவதும் பரிந்துரைக்கப்பட்டபடி இந்த மருந்துகளை நீங்கள் எடுத்தாக வேண்டும்.

நோயெதிர்ப்பு மருந்துகள் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா?

நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு ஒரு நபரின் எதிர்ப்பைக் குறைக்கின்றன மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினமாக்குகிறது. இந்த மருந்துகள் கல்லீரலை நிராகரிப்பதைத் தடுப்பதற்காகவே இருந்தாலும், அவை சில வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனையும் குறைக்கின்றன. நோயாளிகளை பொதுவாக பாதிக்கும் உயிரினங்களை தடுப்பு மருந்துகள் தடைசெய்யும், இருப்பினும், தொற்றுநோய்களுடன் இருக்கும் நபர்களிடம் இருந்து  விலகி இருப்பது மிகவும் அவசியம்.

கல்லீரல் மாற்று சிகிச்சை பெறுபவர்கள் இந்த மருந்துகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

வழக்கமாக, ஆம். இருப்பினும்,  நோயாளியின் உடல் இடமாற்றப்பட்ட கல்லீரலுடன் இணைந்து செயல்படுவதால், நிராகரிப்பைக் கட்டுப்படுத்த தேவையான மருந்துகளின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படலாம். இந்த மருந்துகளை வெற்றிகரமாக எடுத்து முடித்த நோயாளிகள் உள்ளனர். இந்த நிகழ்வுகளில் வெற்றிக்கான காரணங்களை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

நிராகரிப்பின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கல்லீரல் ஒட்டு நிராகரிப்பைக் குறிக்கும் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளின் பட்டியல் இங்கே:

  • 100 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல்
  • சோர்வு அல்லது அதிக தூக்கம்
  • எரிச்சல்
  • தலைவலி
  • வயிற்று வீக்கம், மென்மை அல்லது வலி
  • பசியின்மை
  • மஞ்சள் காமாலை (மஞ்சள் தோல் அல்லது கண்கள்)
  • அடர்ந்த(பழுப்பு) சிறுநீர்
  • அரிப்பு
  • குமட்டல்

இந்த அறிகுறிகள் எதுவும் நிராகரித்தலுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடியவை அல்ல; ஆனால் அவை நிகழும்போது, ​​உங்கள் மருத்துவரை அழைத்து அவரின் ஆலோசனையை கேட்க வேண்டும், அவர்கள் நிலைமையை அப்படியே கண்காணிக்க வேண்டுமா அல்லது கூடுதலான விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமா என்பதை தீர்மானிப்பார்கள்.

நிராகரிப்புக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும், கல்லீரல் ஒட்டு நிராகரிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கக்கூடிய இரத்த பரிசோதனைகளை தவறாமல் செய்துகொள்வதே மாற்று சிகிச்சைக்கு பிந்திய நிலையான உத்தி. நிராகரிப்பின் முதல் அறிகுறியான கல்லீரல் என்சைம்களை மருத்துவர்கள் உங்கள் இரத்தத்தில் பரிசோதிப்பார்கள். ஆரம்பத்தில், இந்த சோதனைகள் தினமும் செய்யப்படுகின்றன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் மாதம் அல்லது குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை சோதனைகள் நடத்தப்படுகின்றன. மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கடந்து செல்லும்போது படிப்படியாக பரிசோதனைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கிறது. நிராகரிப்பு சந்தேகம் இருந்தால் அதை கல்லீரல் பயாப்ஸி மூலம் உறுதிப்படுத்த முடியும். சில சந்தர்ப்பங்களில் பயாப்ஸி தேவையில்லை, ஏனெனில் நிராகரிப்பு வலுவாக சந்தேகிக்கப்படுகிறது. மற்ற சூழ்நிலைகளில், ஒரு பயாப்ஸி முக்கியமானதாகும். ஒரு பயாப்ஸிக்கு, மருத்துவர் ஒரு நுண்ணோக்கின் கீழ் சோதனை செய்து பார்ப்பதற்கு கல்லீரலின் ஒரு சிறிய பகுதியை எடுத்துக்கொள்கிறார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை சேதப்படுத்தும் பிற சிக்கல்கள் யாவை?

முதன்முதலில் கல்லீரல் மாற்றை அவசியமாக்கிய பிரச்சினையின் ஆரம்பம் கல்லீரல் மாற்று நோயாளிகளுக்கு மிகவும் பொதுவான பிரச்சனையாகும். மேலும், அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு முன்பு நோயாளிக்கு ஹெபடைடிஸ் சி வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது மாற்று சிகிச்சையை சேதப்படுத்தும்.

இதில் அடங்கும் பிற சிக்கல்களாவன

  • கல்லீரலுக்குள் அல்லது வெளியே செல்லும் இரத்த நாளங்களின் அடைப்பு
  • குடலுக்குள் பித்தத்தை கொண்டு செல்லும் குழாய்களுக்கு சேதம்

மாற்று அறுவை சிகிச்சை வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது?

நேர்மறை நம்பிக்கை என்பது காலத்தின் தேவை. பெரும்பாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இடமாற்றம் செய்யப்பட்ட கல்லீரல்களில் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை 1 வருடம் கழித்து இன்னும் வேலை செய்து கொண்டு இருக்கின்றன. சில நேரங்களில் கல்லீரல் வேலை செய்ய நீண்ட நேரம் எடுக்கும். கல்லீரலின் தோல்விக்கு மாறுபட்ட அளவுகள் உள்ளன, இருப்பினும், அசாதாரண செயல்பாடுகளுடன் கூட, நோயாளி நன்றாகவே இருப்பார். சிக்கல்கள் இருந்தால் உதாரணமாக, புதிய கல்லீரல் செயல்படத் தவறிவிட்டால் அல்லது உங்கள் உடல் அதை நிராகரித்தால், தோல்வியுற்ற இடமாற்றப்பட்ட கல்லீரலை இரண்டாவது (அல்லது மூன்றாவதும் கூட) மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றலாமா என்பதை உங்கள் மருத்துவரும் மாற்று குழுவும் தீர்மானிக்கும். துரதிர்ஷ்டவசமாக, சிறுநீரகங்களைப்போல கல்லீரல்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை இல்லை. புதிய கல்லீரலுக்காகக் காத்திருக்கும்போது, ​​தோல்வியுற்ற கல்லீரல்களைக் கொண்ட நோயாளிகளை உயிரோடு வைத்திருக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனங்களில்சாதனங்களை உருவாக்க முடியுமா என்று பரிசோதனை செய்து வருகின்றனர்.

நான் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிறகு எனது கல்லீரலை எவ்வாறு கவனித்துக்கொள்வது?

நீங்கள் மருத்துவமனையில் மாற்று மையத்தை விட்டு வெளியேறிய பிறகு, உங்கள் புதிய கல்லீரல் நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த நீங்கள் அடிக்கடி உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். நிராகரிப்பு, நோய்த்தொற்றுகள் அல்லது இரத்த நாளங்கள் அல்லது பித்த நாளங்களில் உள்ள சிக்கல்களால் உங்கள் புதிய கல்லீரல் சேதமடையவில்லை என்பதை சரிபார்க்க நீங்கள் வழக்கமான இரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர்ப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், மேலும் நோய்களின் அறிகுறிகளை உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். வீட்டு பராமரிப்பு என்பது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வதும், அறுவை சிகிச்சைக்கு முன்னர் உள்ள நோயாளியின் அதே ஆரோக்கிய நிலைக்கு மீள்வதும் இதில் அடங்கும். இது எளிமையான செயல்பாடுகளை உள்ளடக்கிய நீண்ட, மெதுவான செயல்முறையாக இருக்கலாம். நடைபயிற்சிக்கு முதலில் உதவி தேவைப்படலாம். இருமல் மற்றும் ஆழ்ந்த சுவாசம் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க உதவுவதற்கும் நிமோனியாவைத் தடுப்பதற்கும் மிகவும் முக்கியம். உணவை பொருத்த வரை முதலில் ஐஸ் சீவல்கள், பின்னர் தெளிவான திரவங்கள் மற்றும் இறுதியாக திடப்பொருட்களைக் உட்கொள்வது நலம். அனைத்து உணவுக் வகைகளுடன் நன்கு சீரான உணவை உட்கொள்வது முக்கியம். சுமார் 3-6 மாதங்களுக்குப் பிறகு, ஒரு நபர் (அவர் அல்லது அவள்) தயாராக இருப்பதாக உணர்ந்தால் தனது முதன்மை மருத்துவரின் அங்கீகரிப்புக்கு பின் வேலைக்குத் திரும்பலாம், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியைத் தவிர, மதுபானத்தில் இருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும், குறிப்பாக உங்கள் சொந்த கல்லீரலுக்கு சேதம் ஏற்படுவதற்கு ஆல்கஹால் முதன்மைக் காரணமாக இருந்தால். மருந்துசீட்டு இல்லாமல் நீங்கள் வாங்கக்கூடிய மருந்துகள் உட்பட எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன், அது உங்களுக்கு பாதுகாப்பானதா என்பதை உங்கள் மருத்துவரிடம் சரிபார்க்க வேண்டும். உங்கள் புதிய கல்லீரலை நன்கு கவனித்துக் கொள்ள உங்கள் மருத்துவர் சொல்லும் அனைத்தையும் விடாமுயற்சியுடன் பின்பற்றுவது மிக முக்கியம்.

எனது அன்றாட நடவடிக்கைகளுக்கு நான் திரும்பிச் செல்ல முடியுமா?

நிச்சயமாக. வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் தங்கள் சாதாரண அன்றாட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடிகிறது. மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு நீங்கள் எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருந்தீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் வலிமையைத் திரும்பப் பெற சிறிது நேரம் ஆகும். உங்களுக்கான மீட்பு காலம் எவ்வளவு காலம் இருக்கக்கூடும் என்பதை உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்ல முடியும்.

  • வேலை- மீட்கப்பட்ட பிறகு, பெரும்பாலான மக்கள் வேலையை மீண்டும் தொடங்க முடியும்.
  • டயட் – பெரும்பாலான மக்கள் முன்பு  போலவே மீண்டும் சாப்பிடலாம். 

சில மருந்துகள் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம், மற்றவை நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடும் அல்லது உங்கள் கொழுப்பை அதிகரிக்கும். உணவு திட்டமிடல் மற்றும் சீரான குறைந்த கொழுப்பு உடைய உணவு எடுத்து கொள்ளுதல் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உதவும். மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு நீர் சேர்வதால் எடை அதிகரிக்கும் போக்கு உள்ளது. இந்த நீர் தக்கவைப்பைக் குறைக்க அல்லது அகற்ற உப்பு உட்கொள்வதைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • உடற்பயிற்சி – வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
  • செக்ஸ் – கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் சாதாரண பாலியல் வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள். மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் ஆண்டில் பெண்கள் கர்ப்பமாக இருப்பதைத் தவிர்ப்பது முக்கியம். மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலியல்(செக்ஸ்) மற்றும் இனப்பெருக்கம் குறித்து உங்கள் மாற்று சிகிச்சை குழுவுடன் பேச வேண்டும்.

மேலும் விளக்கங்களுக்கு, எந்த ஒரு புதிய முயற்சியையும் செய்யும் முன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசவும்.


Quick Book

Request A Call Back

X